தமிழ் மலர்
ஆசிரியர் : டாக்டர் மு.பாண்டியராஜன்
Saturday, February 19, 2011
விக்ருதி வருஷ வாக்கிய பஞ்சாங்கம் 2010-2011
Friday, February 11, 2011
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு நாமமது தமிழெரென கொண்டு டிங்கு வாழ்ந்திடல் நன்றோ- சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும் ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும் ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
தமிழ்ப் பற்று
மொழியே உயிர், முதலாவது. முடிவாவது அதுவே. முடியாது- அதை விடவா சமர் முரசே அறை தமிழா விழியே மொழி ஒரு போதிலும் மிதிகாலிடல் சகியோம்
இலக்கணம்
முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம் மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப் பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
சொல் வளம்
- பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்
தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.
தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.
கலைச்சொற்கள்
தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
எண் குறிகள்
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
எண் ஒலிப்பு
- ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் | அளவு | சொல் |
---|---|---|
1/320 | 320 ல் ஒரு பங்கு | முந்திரி |
1/160 | 160 ல் ஒரு பங்கு | அரைக்காணி |
3/320 | 320 ல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
1/80 | 80 ல் ஒரு பங்கு | காணி |
1/64 | 64 ல் ஒரு பங்கு | கால் வீசம் |
1/40 | 40 ல் ஒரு பங்கு | அரைமா |
1/32 | 32 ல் ஒரு பங்கு | அரை வீசம் |
3/80 | 80 ல் மூன்று பங்கு | முக்காணி |
3/64 | 64 ல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
1/16 | 16 ல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
1/10 | 10 ல் ஒரு பங்கு | இருமா |
1/8 | 8 ல் ஒரு பங்கு | அரைக்கால் |
3/20 | 20 ல் மூன்று பங்கு | மூன்றுமா |
3/16 | 16 ல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
1 | ஒன்று | ஒன்று |
எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் | ஒலிப்புச் சொல் |
---|---|
1 | ஒன்று (ஏகம்) |
10 | பத்து |
100 | நூறு |
1000 | ஆயிரம்(சகசிரம்) |
10,000 | பதினாயிரம்(ஆயுதம்) |
1,00,000 | நூறாயிரம்(லட்சம் - நியுதம்) |
10,00,000 | பத்து நூறாயிரம் |
1,00,00,000 | கோடி |
10,00,00,000 | அற்புதம் |
1,00,00,00,000 | நிகற்புதம் |
10,00,00,00,000 | கும்பம் |
1,00,00,00,00,000 | கணம் |
10,00,00,00,00,000 | கற்பம் |
1,00,00,00,00,00,000 | நிகற்பம் |
10,00,00,00,00,00,000 | பதுமம் |
1,00,00,00,00,00,00,000 | சங்கம் |
10,00,00,00,00,00,00,000 | வெள்ளம்(சமுத்திரம்) |
1,00,00,00,00,00,00,00,000 | அந்நியம் |
10,00,00,00,00,00,00,00,000 | (அர்த்தம்) |
1,00,00,00,00,00,00,00,00,000 | பரார்த்தம் |
10,00,00,00,00,00,00,00,00,000 | பூரியம் |
1,00,00,00,00,00,00,00,00,00,000 | பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி) |
சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து
ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்.
ஒலிப்பியல்
பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர்பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.
சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
- தொடர்புடைய கட்டுரைகள்: யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
குறுக்கம்
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
- குற்றியலுகரம் - உயிர் உ
- குற்றியலிகரம் - உயிர் இ
- ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong} ஐ
- ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர் ஔ
- ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்துஃ (ஆய்தம்)
- மகரக் குறுக்கம் - மெய் ம்
Subscribe to:
Posts (Atom)